இராவணன்…. உயிரும் மெய்யும் உயிர்மெய்யுமாய் வெறும் ஐந்தெழுத்துப் பெயர்தான். ஆனால் அந்தப் பெயரையே கொஞ்சம் அழுத்தமாய் உச்சரித்துப் பாருங்கள். சொல்லும்போதே புருவங்கள் உயர்ந்து புஜங்கள் புடைத்து மார் விரியும் மாற்றம் காண்பீர். காரணம் அவ்வரக்கன் பெயர் கொண்ட அசுரம் அல்ல. ஒரு மாவீரன் பெயர் கொள்ளும் கர்வம் அது. இவன்தன் பிறப்பை இன்னார் இன்னார் மகன், இங்கே இப்படியாகப் பிறந்தான் என்று நாலைந்து வரிகளில் நயம்படச் சொல்வது எனக்கொன்றும் அத்தனை பெரிய விடயமல்ல.
என்றாலும் என் பாட்டன், என் நாடாண்ட வேந்தன் பெருமை என் நாவால் நவிலும் இன்பம் நான் காண வேண்டாமா? நீங்கள் நயக்க வேண்டாமா? ஒரு மாவீரன் மரித்ததை அவனே மறக்கும்படியாய் அவன் பிறந்த கதைதனை மீண்டும் மீண்டும் பேசி அவன் புகழ் பாடி நம் மனமாகிய கோட்டைகளில் அவனை மீண்டும் ஆட்சி கொள்ளச் செய்ய வேண்டாமா?
ஆழ வேரூன்றி, விழுதுகள் பல பரப்பி ஓங்கி உயர்ந்து நிமிர்ந்து நின்ற அம்மாவீரன் எனும் பெருவிருட்சத்தின் விதை, உறங்கிக் கிடந்த காலம் தொட்டு துளித்துளியாய் துளிர் விட்டது வரையான சரிதம் தேடும் ஒரு வேட்கைப் பயணத்தின் முதல் அத்தியாயத்தை வரையப் போகிறேன் புவி நிலப்பரப்பில் இருந்த பல கண்டங்களில் ஒன்றாக இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புக்களும் காணப்பட்டன. இக்கண்டத்தை மனுச்சக்கரவர்த்தி என்ற மன்னன் ஆட்சிசெய்து வந்தான். அவனுக்குப் பின் இக்கண்டத்தை அவனது பிள்ளைகளான சமன் என்ற மகனும் ஈழம் என்ற குமரியும் ஆட்சி செய்து வந்தனர். சமன் தென்பகுதியையும் ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரி வடபகுதியையும் ஆண்டனர். குமரி ஆட்சிசெய்த பகுதி குமரிக்கண்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, ஈழம் என்ற அரசியால் ஆட்சிசெய்யப்பட்டதால் ஈழ நாடு, முதலிய நாடுகள் அடங்கின.
இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழ நாடு என்று சொல்லப்படுகின்ற தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புக்களில் இருந்து பிரித்து விட்டது. மேலும் இக்கடற்கோளினால் சமன் ஆண்ட பிரதேசம் கடலினுள் அமிழ்ந்ததோடு, பல வரலாற்றுச் சான்றுகளும் கடலினுள் புதைந்து விட்டன. எஞ்சியிருந்தவை பாரத கண்டம், இலங்கை முதலான பிரதேசங்களாகப் பிரிந்தன. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்கள் இயக்கர், நாகர், பரதர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடும்பர், கருடர், முனிவர், சித்தர், காந்தருவர், வானரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இவற்றில் நம் கதையின் நாயகனும் அவனைச் சேர்ந்தவர்களும் இயக்கர், நாகர், இராட்சதர்களாக இனம்காட்டப்படுகின்றனர். அந்த அடிப்படையில் அவன் வம்சம் பற்றி சற்றே பார்க்கலாம்.
இராட்சத வம்சத்தைச் சார்ந்த சுகேஷனன் என்பவனுக்கு மால்யவான், சுமாலி, மாலி என்று மூன்று இராட்சத மகன்கள் இருந்தனர். பிரம்மதேவரை நோக்கிக் கடுந்தவம் இருந்து வரங்களைப் பெற்ற அவர்கள் மூவரும் தேவ லோகத்தைப் போன்றே தங்களுக்கும் ஒரு இடம் வேண்டுமென நினைத்து: தேவ சிற்பியான விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக அமைக்கப்பட்டிருந்த இலங்கையினை விஸ்வகர்மாவை அச்சுறுத்தி தங்கள் வசப்படுத்தினர். பிறகு தேவர்களுடன் ஏற்பட்ட போரில் தோற்கடிக்கப்பட்ட மாலி மடியவே சுமாலியும் மால்யவானும் தங்களது இருப்பிடமான பாதள லோகத்திற்கே மீண்டும் சென்றனர்.
அதன் பின் மகரிஷி விஸ்ரவரின் கட்டளைப்படி அவருக்கும் வாராவர்னிக்கும் பிறந்த ஒரே மகன் குபேரன் இலங்கையை தனது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். குபேரனின் செழிப்பைக் கண்டு பொறாமையுற்ற சுமாலி தனக்கும் குபேரனைப் போல மகன் இருந்தால் உலகையே ஆட்சி செய்யலாம் என நினைத்தான். தன் மகளான கேகவியிடம் தன் ஆசையைக் கூறி ‘அசுர குலம் தழைக்க நீ விஸ்ரவ முனிவரை மணந்து கொண்டு குபேரனைப் போல் ஒருவனைக் குழந்தையாகப் பெற்றுக்கொள்’ என வேண்டினான். கேகசியும் சம்மதித்து முனிவரின் ஆச்சிரமம் அணுகவே, அசுர குலத்தைச் சேர்ந்த பேரழகுப் பதுமையைக் கண்டதும் முனிவரும் சம்மதிக்கிறார்.
அவர்கள் ‘அந்திக் கருக்கல்’ நேரமான அமங்கலமான நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு ராஷசர்களே பிள்ளைகளாகப் பிறக்கும் என விஸ்ரவர் எடுத்துரைத்தார். எனினும் அவர் கூறிய சொற்களை ஏமாற்று வார்த்தைகள் என்று எண்ணிய கேகசி அப்போது அதைப் பெரிதுபடுத்தவில்லை. பத்து மாதங்களுக்குப் பிறகு பத்துத் தலைகள், இருபது கைகள், பயங்கர விழி, சுருண்ட கேசம் என முனிவர் எச்சரித்ததைப் போலவே ஒரு குழந்தை கேகசிக்குப் பிறந்தது. குழந்தையை தூக்கிக் கொண்டு முனிவரிடம் சென்ற கேகசி தன்னை மன்னித்து முனிவரின் தவவலிமையால் குழந்தையை மீட்கக் கெஞ்சினாள். அது இயலாத காரியமென மறுத்த முனிவர் ‘குழந்தையை அழகாக மாற்றுகிறேன்’ என்று கூறி அவனின் பத்து முகங்களையும் அழகாக்குகின்றார். மேலும் இவன் வலிமை நிறைந்தவனாகவும் யாரும் வெல்ல முடியாதவனாயும் விளங்குவான் என்றும் தசக்கிரீவன் (தசம் என்றால் பத்து. கிரீவம் என்றால் கழுத்து) எனப் பெயர் சூட்டியும் ஆசீர்வதித்தார். அதன்பின் குறுகிய இடைவெளியில் கேகசி கும்பகர்ணனையும், சூர்ப்பனகையையும். விபீஷணனையும் பெற்றெடுக்கிறாள்.
இராவணனும் அவன் தம்பி கும்பகர்ணனும் முற்பிறவியில் பெருமாளின் வாயிற் காப்பாளர்களாக இருந்த ஜெய விஜயர்கள் ஆவர். தாங்கள் அனுமதித்தால் மட்டுமே பெருமாளைக் காண உள்ளே செல்ல முடியும் என்ற ஆணவம் இருவருக்கும் ஏற்படுகிறது. பின் தவறை உணர்ந்த அவர்கள் விமோஷணம் கேட்கவே ஏழு ஜென்மம் விஷ்ணுவின் அவதாரமாக பூமியில் பிறக்க வேண்டும். அல்லது மூன்று ஜென்மம் விஷ்ணுவின் எதிரியாகப் பிறக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. விரைந்து விஷ்ணுவை அடைய வேண்டுமென்ற நோக்கில் இருவரும் எதிரிகளாக பிறக்கின்றோம் என்று கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. இது இப்படியிருக்க மிகப் பெரும் ஆற்றல் கொண்ட நம் தசக்கிரீவன், தான் மானுடப் பிறப்பினை எடுக்கும் போதே நாம் எதற்காக பூலோகம் செல்கிறோம், இப்பிறப்பின் நோக்கம் என்ன என்பதை அறிந்தேயிருந்தார். அத்தோடு தான் ஒரு விஷ்ணுவின் அவதாரத்தால் வதம் செய்யப்படுவோம் என்றும் அதுவே தனக்கு முக்தியளிக்கப் போகிறதென்றும் அறிந்தேயிருக்கிறார்.
தொடரும்….
ராவணாயணம் பாகம் 1
ராவணாயணம் பாகம் 3
ராவணாயணம் பாகம் 4
Discussion about this post