இலக்கியம் எனப்படுவது காலத்தை படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்தக் கண்ணாடியின் மூலம் நாமின்று ரசிக்கும் விம்பங்கள் அனைத்துமே உண்மையானவையா? அல்லது நிஜத்தில் நிகழ்ந்ததாய் இட்டுக் கட்டிய கட்டுக் கதைகளா? சான்றுகள் இல்லாதபோதும் உண்மை என நிறுவப்படும் கதைகளுக்குள்ளே இது ஆயிரமாயிரம் சான்றுகளைக் கொண்டிருந்தும் பாராமுகமாக சிலரால் இன்றுவரையில் கற்பனைக் கதை என்று சொல்லப்பட்டு வரும் காவியம். இராமாயணம்.
இதனை இராம + அயணம் என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம். (இராமன் – அழகு, அயநம் – கதை : சொற்புணர்ச்சியால் அயநம் – அயணம் ஆனது.) என்றாலும் நான் சொல்லப் போவது இராமாயணத்தின் நாயகன், ரகு வம்ச இளவரசன், தசரத புத்திரன், ஏகபத்தினி விரதன் இராமன் கதையல்ல. வலித்த அரக்கன், இராக்கதன் என்றெல்லாம் சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் கூறும் மாவீரன் இராவணன் காதை. துலாபாரத்தின் ஒருபக்க ஏற்றத்துக்காக மறுபக்கமாய்த் தாழ்த்தப்பட்ட தசக்கிரீவன் கதை. இராமாயணத்தை இதிகாசமாக்குவதற்காக இல்லாமல் செய்யப்பட்ட இலங்கேஸ்வரன் கதை. இது ராவணாயணம்.
இலக்கிய காலம் தொட்டு இந்த இயந்திர காலம் வரையில் எதிர்மறைக் கதாப்பாத்திரம் என்று ஒன்று இல்லையென்றால் அக்கதையானது சுவாரஸ்யம் இழந்துவிடும். ஆனால் எதிர்மறைக் கதாப்பாத்திரம் என்பது வெறுமனே கெட்ட எண்ணங்களையும் குரூர சிந்தனைகளையும் கீழ்நிலை செயற்பாடுகளையும் கொண்ட கதாப்பாத்திரமாக மட்டும்தான் அமைந்திருக்கும் என்கின்ற நம் தீட்டப்படாத எண்ணம்தான் இராவணன் பற்றிய பல உண்மைகளை எமக்கு அறியவிடாமற் செய்தது. உண்மையில் இராவணன் யார்? அவனது பத்து முகங்களுக்குப் பின்னால் மறைக்கப்பட்ட அவனின் பதினோராவது முகம் எது? அதில் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் இடம் தரப்பட்டிருந்ததா? பார்போற்றும் இராமன் மட்டுமா பாராட்டுக்குரியவன்? நம் இலங்கேஸ்வரன் பற்றிய நிதர்சனம் என்ன? சில வரலாற்றுப் பக்கங்கள் சீர்தூக்கப்பட்டு வேறு கோணத்தில் நோக்கப்படுகையில் நேர் – மறையாகும், மறை – நேராகும். இது என் தேடல்…
இராவணன், இராவணேஸ்வரன், தசக்கிரீவன், திரிலோக அதிபதி என்ற பெயர்களைக் கொண்ட பத்துத் தலை ஆணழகன் தான் நம் நாயகன். இனக்கலப்பு பெற்றோரான பிரபல மகரிஷி விஸ்ரவ முனிவருக்கும் – யாரும் அறியாத அசுர குலத்தைச் சேர்ந்த கேகசிக்கும் மகனாகப் பிறந்த இராவணனுக்கு விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோரே உடன்பிறப்புக்கள். மனைவியர் மண்டோதரி, வேதவதி, ரம்பா. மக்கள் இந்திரஜித், அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன், நாராந்தகன், வேதாந்தகன்.
பெரும் சிவ பக்தனாகத் திகழ்ந்த இராவணன் சிவன் மீது பக்தியைத் தாண்டி அலாதி பிரியம் கொண்டவனாகக் காணப்பட்டான். எப்போதும் திருநீறு அணிந்திருக்கும் இராவணன் தானாண்ட இலங்கையை வளம்மிக்கதாக வைத்திருந்ததோடு, இலங்கை அழியாதிருக்க சிவனை நோக்கித் தவம் இருந்தான். இதன் வரமாக ஆத்ம லிங்கத்தையும் சிவனிடமிருந்து பெற்றுக் கொண்ட பெருமைக்குரிவன். மேலும் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவனான இராவணன், தனது கை நரம்புகளால் சாமகானம் பாடி சிவனை மகிழ்வித்தாக கூறப்படுகிறது, இசையில் அதிலும் வீணை வாசிப்பதில் கைதேர்ந்தவனாய் விளங்கிளான் நம் நாயகன். வேதங்கள் அறிந்த புத்திசாலியான இராவணன் அதிக புத்திகூர்மை கொண்டவனாகவும் சிறந்த கல்விமானாயும் விளங்கினான். ஆயகலைகள் அறுபத்திநான்கிலும் தேர்ச்சி பெற்றிருந்த தசக்கிரீவன், ஜோதிடத்திலும் எதிர்காலக் கணிப்பிலும் ஒரு தீர்க்கதரிசியாய் விளங்கினான்.
அவனது இறுதி அத்தியாயம் கூட மிகத்துல்லியமாய் அவனால் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. ஆயர்வேதம் அறிந்திருந்த அவன், ஆயர்வேதம் பற்றிய புத்தகத்தை எழுதியதாகவும் கூறப்படுகின்றது, மண்டோதரி கர்ப்பிணியாக இருந்த போது குழந்தை நலம் பற்றி குறிப்பாகக் குழந்தைக்கு ஏற்படும் நோய் – அதற்கான மருத்துவம் பற்றி எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எண்ண அலைகளால் நினைத்த மாத்திரத்தில் பறக்கக்கூடிய புட்பக விமானத்தை இராவணன் கொண்டிருந்தாக வான்மீகி ராமாயணம் குறிப்பிடுகின்றது. இன்று இருக்கும் சிகிரியா இராவணன் காலத்தில் அவரது புட்பக விமாகம் தரையிறக்கும் தளமாக இருந்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான்; என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கிலிருந்து வடக்குகுவரை பல பாதிப்புக்கள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து சூட்டப்பட்டிருக்கும் பெயர்கள் இன்னும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழ் மன்னான இராவணன் ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்து வந்தான். இப்படிப்பட்ட புகழ்வாய்ந்த இராவணன், போற்றுதற்குரியவன், வரலாற்றுத் திரபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். அதேவேளை தமிழன் பற்றிய வரலாற்றுச் சிதைப்புக்களின் விளைவாக தமிழில் இருப்பதை விட இராவணன் பற்றிய ஆய்வுக்குறிப்புக்கள் சிங்களத்தில் தான் அதிகம் காணப்படுகின்றன. இது மொத்த தமிழ்ச் சமூகமும் வெட்கித் தலை குனியவேண்டிய விடயம். இராவணனைச் சிங்கள மன்னாக சித்திரிக்கும் போக்கும் இங்கு காணக்கூடியதாய் உள்ளது.
நாம் பிறரைக் குறைகூறுவதிலேயே நம் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதால் நம் குற்றம் நமக்குத் தெரிவதில்லை. ‘இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது’ என்று சொல்லிச் சென்றவர்களும் நம் முன்னோர்கள் தானே? இமைக்குற்றம் என்று நான் சொல்வது பிறரை சாடுவதை அல்ல. நம் மறத்தலைவனை நாம் மறந்துவிட்ட கதையைக் குறிப்பிடுகிறேன். நாம் கைவிட்டதை பிறர் ஏற்றும்போது வரும் கோபமும் ஆவேசமும் நம் சந்ததியினருக்கு நாம் நமது உண்மை வரலாற்றைச் சொல்லிக் கொடுக்கவில்லை என்னும் போது ஏன் எம்மீது வருவதில்லை?
இது வியூகாவின் வியூகத்தில் ஒரு மாவீரன் சரிதம் காணும் முயற்சி. அவன் விதைக்கப்பட்டதிலிருந்து வீழ்த்தப்பட்டது வரைக்குமான விளக்கங்கள் காணும் முயற்சி.
தொடரும்…
ராவணாயணம் பாகம் 2
ராவணாயணம் பாகம் 3
ராவணாயணம் பாகம் 4
Discussion about this post